வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு முன் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா ‘வணங்கான்’ படத்தில் நடித்துவந்தார். எதிர்பாராதவிதமாக இப்படத்திலிருந்து சூர்யா விலகினார். இயக்குநர் பாலா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது. வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பார் என ஒரு தகவல் பரவிவருகிறது.
இந்த அதிர்ச்சியிலிருந்தே சூர்யா ரசிகர்கள் வெளிவராதபோது மேலும் அதிர்ச்சி அளிக்கும்விதமாக வெற்றிமாறன் இயக்கத்திலிருந்து சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் வாடிவாசல் பட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு அந்த தகவலை மறுத்திருக்கிறார். ‘வாடிவாசல்’ பட முன்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும், ‘விடுதலை’ படத்துக்கு பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.