விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னையில் பரப்புரையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதிக்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பரப்புரையை தொடங்கிய விஜய்
இதனைத் தொடர்ந்து விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாதுகாப்பில்லை, டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்க முடியவில்லை. தாக்குதல் நடத்தும் அளவுக்கு போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார். விசில் சின்னத்திற்கு ஒரு வாய்ப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு விஜயே மிரண்டு விட்டார் என ஆதவ் அர்ஜூனா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். போலீசார் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக மீண்டும் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்து விடக்கூடாது என கருதி வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரைக் காண நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விஜய் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 5 ஒலிப்பெருக்கிகள் வைக்க அனுமதி வாங்கி விட்டு 30 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தினார்கள். அதேபோல் 300 பேர் கூடுவார்கள் என சொல்லி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள் எனவும் இது தேர்தல் விதிமீறல் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் தொடர்ச்சியாக விஜய் பரப்புரையில் தடைகள் ஏற்பட்டு வரும் நிலையில் அவர் 234 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது