சட்டப்பேரவை தலைவர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலை தவறிவிட்டதாகவும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவைத் தலைவர் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுப்பதாகவும்” அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், வரி உயர்வு, டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு இருந்தும் புதிய திட்டங்கள் இல்லையென்றும் எடப்பாடி குற்றம் சாட்டினார். 10 ஆண்டுகளில் அதிமுக 5 லட்சம் கோடி மட்டுமே கடன் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.முதலமைச்சர் ஆளுநர் உரை விவாதத்தில் 2 மணி நேரம் 52 நிமிடம் பேசியது குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகமாக இருந்ததால் தான் அவ்வளவு நேரம் பேச வேண்டியிருந்ததாகக் கூறினார். சட்டமன்றத்தில் தான் பேசிய முழு காணொளியையும் தர மறுத்து சில நிமிடங்கள் மட்டுமே கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.கருமேனி நம்பியாறு திட்டம் குறித்து அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பியதற்கு பேரவைத் தலைவர் பதிலளிப்பது திமுக சார்பாகப் பதில் அளிப்பது போலாகுமென்றும் எடப்பாடி கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவின் ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.வாக்குகளைப் பெறுவதற்காகவே திமுக ஒரு லட்சம் வீடுகள் திட்டத்தை அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களையே அறிவித்ததாக எடப்பாடி தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இன்று நீங்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு, எங்கள் உறவில் பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எப்போதும் ஒற்றுமை நிலைத்திருக்கிறது. யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது. நான் முதலமைச்சராக இருந்தபோது எங்களுக்குள் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் உடைக்கவோ முடக்கவோ முடியாது. முயற்சி செய்தவர்கள்தான் மூக்குடைந்து போனார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.