தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார்.
வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம் என்பது, திமுக மற்றும் தவெக-விற்கானது மட்டுமே என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார்.
தவெக Vs திமுக – விஜய் சூளுரை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதிலிருந்தே, திமுகவை எதிரியாக நிர்ணயித்தே விஜய் செயல்பட்டு வருகிறார். ஆனால், திமுக, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மற்றும் பிரதமர் மோடி என யாரையும் பெயர் சொல்லிக் கூட விமர்சிப்பதில்லை என விஜய் மீது விமர்சினங்கள் இருந்தன. இந்நிலையில் தான், தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் நேரடியாகவே தாக்கி பேசினார். முறையான வரிப்பகிர்வு கொடுக்காத பாஜக, திமுக உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடியையும் விமரிசித்தார். அதோடு, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம் என்பது, திமுக மற்றும் தவெக-விற்கானது மட்டுமே என விஜய் சூளுரைத்துள்ளார். இதனால், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
விஜய் கட்டமைக்கும் கோட்டை:
எம்.ஜி.ஆரை தொடர்ந்து எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்தே, தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள், பல தசாப்தங்கள் கடந்தும் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்பதற்கு காரணமாக இருப்பது அவர்களின் வலுவான கட்டமைப்பு தான். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கட்சியை கட்டமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தலா இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பதவிகளை அறிவித்துள்ளார். மொத்தம் 3 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளைகள் தொடங்கி மாநில அளவில், கட்சியை வலுப்படுத்தி வருகிறார். கிராமங்கள் வரை திமுக அரசின் தோல்விகளை எடுத்துச் சென்று, அவர்களது வாக்கு வங்கியை தகர்க்க பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
69 ஆயிரம் பூத் கமிட்டி:
ஒரு கட்சியின் ஆணி வேராக கருதப்படுவது பூத் கமிட்டி தான். பூத் கமிட்டிகள் வலுவாக இல்லாததன் காரணமாக தான், பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி வருகின்றன. அந்த நிலையை அடையகூடாது என்பதை உறுதி செய்யவே, கிராமங்கள் வரை கட்சியை கொண்டு சேர்த்து ஒட்டுமொத்தமாக 69 ஆயிரம் பூத் கமிட்டியை அமைக்க விஜய் பணிகளை முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே 50 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விரைவில் அடைவோம் என்றும், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
களத்தில் விஜய்:
கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கியபோது, நகர்ப்புறங்களில் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. அதை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், களத்தில் இறங்காமல் மேல்மட்ட அரசியல் மட்டுமே செய்ததன் விளைவே, இன்று அந்த கட்சியும் திமுகவிடம் சரணடைந்துள்ளது. அதுபோன்று இல்லாமல், மாநிலம் முழுவதும் நரம்புகளை போன்று தனது கட்சியை கொண்டு சேர்க்க, விஜய் விரைவில் நடைபயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டதை போன்று இல்லாமல், உண்மையாகவே மக்கள் மத்தியில் பயணித்து கட்சியை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
கூட்டணி வேண்டாம்.. தனித்தே போட்டி?
திமுகவை அரசியல் எதிரி என சாடிய விஜய், தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக பாஜவையும் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை. இதன் மூலம், 2026ல் பிரதான கட்சிகளுடன் கூட்டணி ஏதும் அமைக்காமல், தனித்தே தேர்தலில் களம் கண்டு தனது பலத்தை நிரூபிக்க விஜய் முனைந்து வருகிறார். முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சந்தேகம் தான். ஆனால், ஆட்சிக்கு எதிரான வாக்குகள், திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று இல்லையா என ஏங்கும் இளைஞர்களின் வாக்குகளை விஜயின் தவெக கவரலாம். இதனால், யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணயிக்கும் அளவிலான வாக்கு சதவிகதத்தை பெற்று, தமிழ்நாட்டின் வலுவான அரசியல் சக்தியாகவும் விஜய் உருவெடுக்கலாம்.