திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு சொந்தக் கட்சியான விசிகவை வளர்க்கவும் பாடுபடுங்கள் என தவெகவினர் ஆளூர் ஷா நவாஸை சாடியுள்ளனர்.
நாகையில் விஜய் பேச்சு..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று நாகையில் பேசுகையில், அந்த மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டார். அதில். நாகப்பட்டினத்தில் அதிகமாக இருக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும், கடல்சார் கல்லூரியை கொண்டுவவும் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு திமுகவை தாண்டி அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள், விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரான விசிகவின் ஆளுர் ஷா நவாஸ் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.
ஷா நவாஸ் பதிலடி
விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த ஷா நவாஸ், “விஜய் பேசுவது எல்லாம் பொய்ப்புரட்டுதான். அவதூறான, இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார். அவர் இருக்கிற கட்சிகள் மீது வன்மத்தை கக்குகிறார். அது யாருடைய அரசியல்? அதனால்தான் அண்ணாமலை, ஆளுநர் ரவியுடன் ஒப்பிட்டு அவரைப் பற்றி பேசுகிறேன். விஜய்க்கு எல்லாதரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் தற்போது நடிகராக இல்லை. அரசியல்வாதியாகிவிட்டார். திமுக, அரசு மீது அடுக்கடுக்கான அவதூறுகளை பரப்புகிறார்” என ஆவேசமாக பேசியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு தான் தவெகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.