விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மனுவில் விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர் நீதிமன்ற கருத்துகளை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஏற்கெனவே திட்டமிட்ட வழியில் அல்லாமல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திய வழியில்தான் த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் வாகனம் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது.மேலும் சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது விஜய் மற்றும் நிர்வாகிகளுக்குத் தெரியாது எனவும், காவல் துறை தடியடி நடத்தியதால்தான் தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பிரச்னை ஏற்பட்டால் எந்நேரத்திலும் விஜய் மற்றும் நிர்வாகிகளின் வாகனத்தைத் திருப்பி அனுப்ப அதிகாரம் இருந்தும் காவல் துறை அப்படி எதையும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.