நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனிக்கிறது.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த 8-ம் தேதி வெளியாகியுள்ளது. கல்வி வணிக மயம் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதை கதையின் நாயகன் எப்படி அணுகுகிறார் என்பதுதான் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள அந்த மனுவில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் விரைவில் (17-02-2023) திரைக்கு வர உள்ளது. அதற்கு… “வாத்தி” என்று பெயர் வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது…! இதே படம் தெலுங்கில் ” சார்” என்ற பெயரில் வெளியாகிறது.
தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில் ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் “வாத்தி” என்று பெயரிட்டு வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் ” வாத்தியார்” என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல “சார்” என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும்.