சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்) பட்டாகத்தியால் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது தமிழகத்தில் இளைஞர்களின் தவறான போக்குகளையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” என்று கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை அரசு முன்கூட்டியே தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். போதைப்பொருள் நடமாட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, கல்வி சூழல் இல்லாமை ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். “இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற அரசின் அலட்சியம்” என்று விமர்சித்தார்.
விஜய், எஞ்சிய ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தினார். “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டங்கள் இல்லை” என்று கூறிய அவர், அரசின் கொள்கைகளை கடுமையாக சாடினார்.