திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதேஷ், தமிழ்நாடு அரசின் தேர்வுக்குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநில அரசின் திரைப்பட விருதுகள்
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசின் தரப்பில் வழங்கப்படும் விருதானது, தங்களது உழைப்புக்கான பெரும் அங்கீகாரமாக தமிழ் திரையுலகினர் மதித்து வருகின்றனர். அந்த வகையில் தான், அண்மையில் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களுக்கான மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இடம்பெற்றுள்ள சில திரைப்படங்கள் தான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன.
திரைத்துறையினர் குற்றச்சாட்டுகள்
மாநில அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே, திரைப்படத்துறையினர் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” என குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சின்னத்திரை நடிகை லட்சுமி, நடிகர் அட்டக்கத்தி தினேஷ், குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் மற்றும் மோனிகா ஆகியோரும் இணைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற பல தரமான மற்றும் சமூக மாற்றத்திற்கு உகந்த படங்களை எல்லாம் விட்டு, யாரும் கேள்விபட்டிராத படங்கள் தேர்வுக்குழுவிற்கு மட்டும் புலப்பட்டது எப்படி என நெட்டிசன்களும் சாடி வருகின்றனர்.
வராத ”சண்டக்காரி”-க்கு விருது
மாநில அரசின் விருது பட்டியலில் சண்டக்காரி எனும் திரைப்படத்திற்கு, 2020ம் ஆண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர் மற்றும் சிறந்த கலை இயக்குனர் என மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆர்.மாதேஷ் என்பவர் இயக்கத்தில் விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவான இந்த திரைப்படம், கடந்த 2020ம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்டு இதுவரை திரைக்கே வரவில்லை என்பதே உண்மை. ஆனால், வெளியாகாத சண்டக்காரி திரைப்படத்திற்கு மாநில அரசின் மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது எப்படி? என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. அதுவும் இது ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், டாணாக்காரன் திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் லால் ஆகியோர் ஒட்டுமொத்த படத்தையும், தங்களது நடிப்பால் தோளில் சுமந்து இருப்பார்கள். ஆனால், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்த போஸ் வெங்கட்டிற்கு சிறந்த குணச்சித்தர நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களும் விவாதத்திற்குள்ளாகியுள்ளன.
யாருப்பா அந்த தேர்வுக்குழு?
மாநில அரசின் திரைப்பட விருதுகள் என்பது உண்மையான திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்கான ஒரு களமாகவே கருதப்படுகிறது. ஆனால், அண்மைக்காலங்களாக அறிவிக்கப்படும் விருதுகள், தகுதியான நபர்களுக்கே வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழச்செய்துள்ளது. திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் மாதேஷ், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் இருப்பதன் மூலம், தனது படத்திற்கான விருதை தானே அறிவித்துக் கொண்டாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. போஸ் வெங்கட் திமுகவிற்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்குமோ? என நெட்டிசன்கள் களமாடி வருகின்றனர். சொந்த படங்களுக்கும், ஆதரவான நபர்களுக்கும் விருது வழங்குவதற்கு தேர்வுக்குழு எதற்கு? அரசின் பணத்தை வீணடிப்பது ஏன்? எனவும் சாடி வருகின்றனர்.
மாநில அரசின் விருதுகளுக்கான பரிசு
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்ப்படும் சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.