சென்னையில் காகங்கள் உயிரிழந்ததற்கு பறவைக்காய்ச்சலே காரணம் என்று ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை அடையாறு பகுதியில் திடீரென காகங்கள் ஆங்காங்கே உயிரிழந்து கீழே விழுந்து கிடந்தது. சுமார் 18 காகங்கள் வரை உயிரிழந்ததால் இந்த விவகாரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காகங்கள் உயிரிழந்தது ஏன்?
காகங்களின் உயிரிழப்புக்கு மண்ணீரல் வீக்கம், சிறுநீரக பாதிப்பு என்று தொடக்கத்தில் தகவல் வெளியாகியது. உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை மத்திய பிரதேசத்தின் போபாலின் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பறவைக் காய்ச்சல்:
சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் கடந்த ஜனவரி 21ம் தேதி எங்கள் மையத்திற்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசோதனை செய்தபோது, எச்5என்1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு கோழிகள், மற்ற பறவைகள், மனிதர்கள் உள்ளிட்டோருக்கும் பரவும் தன்மை கொண்டது. அனைத்து ஊராட்சிகள், நகர்ப்புற பகுதிகளிலும் வைரஸ், தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியம் ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் வசிக்கும் பகுதியில் திடீரென பறவைகள் உயிரிழந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.
1. மர்மமான முறையில் பறவைகளோ, விலங்குகளோ உயிரிழந்து கிடந்தால் அதை வெறும் கையால் தொடக்கூடாது. இதனால், நோய்த் தொற்று பரவும் அபாயம் உண்டாகும்.
2. பறவைகள் இறந்தால் முறையாக அப்புறப்படுத்த, ஆழமாக குழி தோண்டி அந்த பறவையை புதைக்க வேண்டும்.
3. உங்கள் பகுதிகளில் திடீரென பறவைகள் உயிரிழந்தால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
4. கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் தீவிரமாக கண்காணிப்பு மேற்காெள்ள வேண்டும்.
5. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
மேலும், மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தமிழக வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் காகங்கள் உயிரிழந்தது போல, கடந்த சில நாட்களாகவே திருவள்ளூரிலும் காகங்கள் ஆங்காங்கே உயிரிழந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பீகாரிலும் பறவைக்காய்ச்சலால் பறவைகள் உயிரிழப்பு நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், காகங்கள் உள்ளிட்ட பறவைகள், விலங்குகள் ஏதேனும் மர்மமமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அதை மிக கவனமாக கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.