ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
ICC T20 World Cup India Vs Ned: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறியது.
ஆஸ்திரேலியா எலிமினேட்:
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அணி, தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை சார்ந்து இருந்தது. ஆனால், அந்த போட்டி மழையால் கைவிடப்படவே 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலியாவால் 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும் என்பதால், நடப்பு ஐசிசி டி20 உலக் கோப்பையில் லீக் சுற்றுடன் ஆஸ்திரேலியா அணி வெளியேறியுள்ளது. இதனிடையே, இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று போட்டி நடைபெற உள்ளது.
இந்தியா – நெதர்லாந்து மோதல்
இரு அணிகளும் மோதும் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுவிட்ட இந்தியாவிற்கு, இன்றைய போட்டி ஒரு பயிற்சி ஆட்டமே ஆகும். அதேநேரம், நெதர்லாந்து அணி இன்றைய போட்டியில் வென்று, பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால், இந்த இரு அணிகளில் ஒன்று ரன் ரேட் அடிப்படையில், க்ரூப் ஏ-விலிருந்து சூப்பர் சுற்றுக்கு தேர்வு செய்யப்படக் கூடும். எனவே நெதர்லாந்து அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.
இந்திய அணியின் பலம்
இந்திய அணி நீளமான மற்றும் வலுவான பேட்டிங் லைன் – அப்பை கொண்டிருப்பது எதிரணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அதிலும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அபிஷேக் சர்மா கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் சொதப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாம்சனிற்கு மீன்றும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வீரரான ஹர்திக் பாண்ட்யா கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. பவுலிங் யூனிட் ஒட்டுமொத்தமாகவே நடப்பு உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. அநாவசியமான தவறுகள் எதையும் செய்யாமல் தங்களது திறமையை வெளிப்படுத்தினாலே இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றுவிடலாம். இந்த இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானதாகும். வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகிய இரண்டுமே இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஷாட்களை மிகவும் எளிதில் வெளிப்படுத்தலாம். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 165 ஆக உள்ளது. மழையால் இந்த போட்டி பாதிக்கப்பட எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங்.
நெதர்லாந்து: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ’டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), ஜாக் லயன் கெஷட், லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரோலோஃப் வான் டெர் மெர்வ், கைல் க்ளெயின், பால் வான் மீக்ரென்
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற்ற அணிகள்:
| க்ரூப் 1 | க்ரூப் 2 |
| இந்தியா (க்ரூப் – A) | இங்கிலாந்து (க்ரூப் – C) |
| மேற்கிந்திய தீவுகள் (க்ரூப் – C) | நியூசிலாந்து (க்ரூப் – D) |
| தென்னாப்ரிக்கா (க்ரூப் – D) | இலங்கை (க்ரூப் – B) |
| ஜிம்பாப்வே (க்ரூப் – B) | உறுதியாகவில்லை (பாகிஸ்தான்/நெதர்லாந்து) |
இன்று நடைபெற உள்ள நமீபியா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை தோல்வியுற்றால் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். அதையும்மீறி நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டி உள்ளது.