விஜய் எனும் சிங்கத்தின் பெயரை யாராலும் களங்கப்படுத்த முடியாது என, TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதி ராமைய்யா விளக்கமளித்துள்ளார்.
TN Election 2026: தவெகவினர் சங்கடப்படக்கூடிய வகையில் ஒரு நூல் அளவு கூட TN 2026 படம் இருக்காது என, தம்பி ராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய TN 2026 திரைப்பட போஸ்டர்கள்:
துபாயை சேர்ந்த தொழிலதிபரான கண்ணன் ரவி தயாரிப்பில், உமாபதி ராமைய்யா இயக்கத்தில் TN 2026 என்ற தலைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் நட்டி, தம்பி ராமையா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களில், நட்டியின் தோற்றமானது, நடிகரும், தவெக தலைவருமான விஜயை பிரதிபலிப்பதை போன்றே இருந்தது. இதனால் இந்த படமானது தவெக கட்சிக்கும், விஜய்க்கும் எதிராக உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் படம் என கண்டனங்கள் எழுந்தது. ஜனநாயகனுக்கு தேர்தலை காட்டி தடை விதிக்கும் சூழலில், உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள TN 2026 எனும் அரசியல் படம் மட்டும் தேர்தல் நேரத்தில் வெளியாவது எப்படி? என தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற TN 2026 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழு சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
ஒரு நூல் அளவு கூட.. – தம்பி ராமையா
நடிகரும், TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதியின் தந்தையுமான தம்பி ராமையா பேசுகையில், “அன்பு தம்பி ஆதவ் அர்ஜுனா, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ஆளும் கட்சி திமுக, ஆண்ட கட்சி அதிமுக உள்ளிட்ட எல்லா கட்சியிலும் எனக்கு அன்பு தம்பிமார்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன். எனது வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுக்கலாம். புதியதாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது மகனின் வாழ்க்கை என்பதால் எனக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. வெளியான தகவல்களை மட்டுமே கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சங்கடப்படக் கூடிய வகையிலே, ஒரு நூல் அளவிற்கு கூட இந்த படத்தில் எதுவும் இருக்காது. இதையா நாம் கேள்வி கேட்டோம் என நீங்களே என்னை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். அப்படித்தான் இந்த TN 2026 படம் இருக்கும்ன் என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
இயக்குனர் சொல்வது என்ன?
தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் உமாபதி, “படத்தில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களும் போட்டி போட்டு நடித்தனர். அது ஒரு இயக்குனராக எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. இந்த படத்திற்காக நட்டி கடுமையாக உழைத்துள்ளார். வேறு காலகட்டங்களில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதால், அதற்கேற்ப அவரது தோற்றமும் மாறுபட்டிருக்கும். அதில் ஒரு தோற்றத்தை மையமாக கொண்டு பல மீம்ஸ்கள் வந்துகொண்டுள்ளன. அந்த தோற்றம் மூலம் யாரோ ஒருவரை களங்கப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்படி எந்தவொரு நோக்கத்துடனும் இந்த படம் எடுக்கப்படவில்லை. இது ஒரு அரசியல் படம். அண்ணா (விஜய்) சொன்னதை போல சினிமாவை சினிமாவாக பாருங்கள். நான் களங்கப்படுத்துவாக கூறப்படும் நபர் சிங்கம் (விஜய்). சிங்கத்தை யாராலும் களங்கப்படுத்த முடியுமா? அது எப்படி இருந்தாலும் சிங்கம். இதை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என இயக்குனர் உமாபதி பேசியுள்ளார்.