2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. அந்த கட்சியினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் தவெக போட்டியிடுவதால் வாக்குகள் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்ற நிலை இருக்கிறது. இதனால் அரசியல் களத்தில் ஆட்சியில் பங்கு, அதிக சீட் கேட்டு நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டணி கட்சிகளால் தலைமைக்கு எழுப்பப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூரில் நடைபெற்ற நிலையில் அங்கு ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை விஜய் கூறியுள்ளார்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்
- பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு நம் ஆட்சியில் நம்பர் 1 ஆக இருக்கும்.
- சட்டம் ஒழுங்கு மிக தீவிரமாக கண்காணிக்கப்படும்.
- அரசு பள்ளிகள், கல்லூரிகள் முதல் தரமானதாக இருக்கும்
- போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள லட்சங்களைக் கொட்டி தனியார் கோச்சிங் சென்டர்களை அணுகும் தேவை இருக்காது. ஏனென்றால் அதற்கேற்ற வகையில் பள்ளி, கல்லூரி பாட அமைப்புகள் மாற்றியமைக்கப்படும்.
- உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல் சாசன திட்டம் சேர்க்கப்படும். மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடு, அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு தெளிவான புரிதல் ஏற்படும் வகையில் செயல்முறை பாடங்கள் சேர்க்கப்படும்.
- இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர்களுக்கு புரிதல் உருவாக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தம் சுகாதாரம் நிறைந்த கதவு வசதிகளுடன் கூடிய கழிப்பறை அமைக்கப்படும்.
- போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
- மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பிக்களில் சரிபாதி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
- மலைக்கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும். பஸ் போக்குவரத்து இல்லாத மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்ஸி, லாரி போன்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்கும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.
- தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தேவையான தொழிற்சாலைகள் அமைக்கப்படும். தொழில் வளம் பெருக்க தனி கவனம் செலுத்தப்படும் என பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.