தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டி என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
TVK Vijay Speech Vellore: தன் மீது இருக்கும் ”காண்டு” காரணமாகவே ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் தன்னை எதிர்ப்பதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
விஜய்க்கும் – ஸ்டாலினுக்குமான போர்..
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்களை நேரடியாக சந்திக்க விடாமல் தன்னை தடுக்க சதி நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து என்னுடைய சொந்தங்களாகிய மக்களை சந்திப்பேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் – தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என ஸ்டாலின் உருட்டினார். தமிழ்நாட்டிற்கும் என்டிஏ-விற்குமான தேர்தல் என்கிறார். ஆனால் எதன் அடிப்படையில் அவர் பேசுகிறார் என்பது புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டுமென மக்களுக்கு தெரியும். உண்மையே இந்த தேர்தலானது தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்திற்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் நிர்வாக திறனற்ற அரசுக்குமான போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்கள் ஆட்சிக்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்குமான போர் இன்னும் சுருக்குமாக சொல்லப் போனால் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடைபெறும் போர்.
அதிசய தேர்தல் – விஜய்
தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் தான் இங்கு போட்டியே. இதில் இன்னொரு காமெடி வேற. அவருடைய ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக உள்ளதாம். ஆம், காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அப்படி தான் இருந்தது. ஆனால், இன்று ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டேண்டர்ட்-அப் காமெடிக்காரர் வழிநடத்தும் மாநிலமாக உள்ளது. வருகிற தடைகளை எல்லாம் மீறி மக்களுக்காக இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கிறது. வழக்காமாக நடைபெறும் தேர்தலாக இதனை கருதாமல், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிசயமாக நடைபெறும் தேர்தலாக இதை கருதுங்கள்.
”எல்லாமே என் மேல இருக்குற காண்டு”
தேர்தல் என்றால் தங்களுக்கான எதிரியை தான் எதிர்ப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் அனைவரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கின்றனர். ஏனென்றால் இந்த விஜய் ஊழல், லஞ்சம், மக்களோடு மக்களாக நிற்கிறான் என்ற காண்டில் அவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எதிர்த்து கொள்ளுங்கள். ஆனால் போட்டி திமுக மற்றும் தவெகவிற்கு இடையே தான். இந்த தேர்தலில் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ள விஜய் மற்றும் விஜி தான் வேட்பாளர்கள். அப்ப உங்க ஓட்டு உங்க குடும்ப வேட்பாளருக்கு தானே. அப்ப உங்க ஓட்டு விசில் சின்னத்திற்கு தானே. இதனை உணர்ந்தே நம்முடைய எதிர்கள் ஏராளமான அவதூறுகளை பரப்புகின்றனர்.
பிரிக்க முடியாத உறவு – விஜய்
ஆனால் என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புவதை போன்றது என எதிரிகளுக்கு தெரியாது. எனக்கு அரசியல் தெரியவில்லை என சொன்னால், அது மக்களுக்கே அரசியல் தெரியாது என சொல்வதை போல. என்னை அசிங்க அசிங்கமாக பேசுவது, மக்களையே அசிங்க அசிங்கமாக பேசுவதை போன்றது. எனக்கு எதிரான ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிரானது என அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விஜயும் மக்களும் வேறு வேறு இல்லை. நாங்கள் ரத்தமும் சதையும் போன்றவர்கள். உடலும் உயிரும் மாதிரி. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான உறவு இது” என தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.