கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத் தொடங்கியுள்ளனர்.
Five State Election 2026: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 24 நாட்கள்தான்:
தமிழ்நாடு, மேற்கு வங்கம் தவிர மற்ற 3 மாநிலங்களுக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் நடுப்பகுதி, இறுதிப்பகுதி அல்லது மே முதல் பாதியில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கு மட்டும் ஏப்ரல் 9ம் தேதியே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் வெறும் 24 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால், இந்த 3 மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்டிற்கும், காங்கிரசுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்ற போட்டி எழுந்துள்ளது.
கேரளாவில் எப்படி?
கேரளத்தில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காங்கிரஸ், கேரள காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் தவிர பாஜக-வின் தாக்கம் இந்த தேர்தலில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பரப்புரையை நாளை முதல் தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
அசாம் நிலவரம்:
வடகிழக்கு மாநிலத்திலே மிகவும் முக்கியமான அசாமில் 126 தொகுதிகள் உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர வியூகம் வகுத்துள்ளது. என்டிஏ கூட்டணியில் அங்கு பாஜக, அசாம் கானா பரிஷத் மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சுதந்திர கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையில் காங்கிரசுடன் ரய்சோர் தளம், அசாம் ஜதிய பரிஷத் கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக-வை வீழ்த்த அங்குள்ள காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.
பாண்டிச்சேரி:
யூனியன் பிரதேசமான தமிழர்கள் வாழும் பாண்டிச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளது. பாண்டிச்சேரியில் தற்போது என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு என்ஆர் காங்கிரசுடன் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்குகிறது. என்டிஏ – பாஜக – அதிமுக தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.
நாளை வேட்புமனுத் தாக்கல்:
இந்த 3 மாநிலங்களிலுமே வேட்புமனுத் தாக்கல் நாளையே ஆரம்பமாகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 23ம் தேதியே கடைசி நாள் ஆகும். இதனால், இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வேட்பாளர்களை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.