தவெகவினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும், வீதி வீதியாகவும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அக்கட்சி தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை நேரடியாக சந்திப்பார் என அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக தேர்தல்
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23ம் தேதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு என அனைத்தும் ஜோராக நடைபெறவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. முதல்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தா அல்லது கூட்டணி அமைக்கிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
வீதிக்கு வரும் விஜய்
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இந்த முறை என்ன மாதிரியான தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் அவர் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வேலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் தவெக தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் மட்டுமே நடைபெற்றது. அதுவும் 5000 பேருக்கு மட்டும் தான் அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜய் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழக அரசையும், காவல்துறையையும் விமர்சித்த்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் விதிகளின்படி பிரச்சாரம் செய்ய அனுமதி தேவையில்லை என்பதால் தவெகவினர் மிக பொறுமையாக காத்திருந்தனர். அவ்வளவு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும், வீதி வீதியாகவும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதிகளெங்கும் விசில் சத்தம்
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் அவர் இரவோடு இரவாக சென்னை திரும்பினார். விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வரும்போது ரசிகர்களை நோக்கி கைகாட்டியபடி வந்தார். இதனைக் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, “டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது. அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது.
இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும். இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்” என தெரிவித்துள்ளார்.
விஜய் விழுப்புரம், திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்தியுள்ள நிலையில் அவரின் அடுத்த சந்திப்பு திருநெல்வேலியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் தவெக வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும் எனவும் கூறப்படுகிறது.