பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவினாசி தொகுதியில் எல்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழக பாஜகவில் நன்கு அறிமுகமான அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தமிழக அரசியலில் பேசுப்பொருளானது. தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட தாமதாகமாகிக்கொண்டே இருந்தது. உத்தேச பட்டியல் வெளியானதில் மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்கள் என்று தெரியவந்தது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் தாமதத்திற்கு காரணம் அண்ணாமலை என்று கூறப்படுகிறது. அவர் கோவை வடக்கு, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட நினைத்ததாகவும், ஆனால், அதற்கு பாஜக தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வேற தொகுதியை ஒதுக்கீடு செய்வதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்து தொடர்ந்து பிடிவாதத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கும் சில தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் அண்ணாமலை கேட்டதாகவும் தெரிகிறது.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், புதுச்சேரியில் இருந்த அண்ணாமலையை உடனே சென்னைக்கு வரக்கூறினார். உடனே ஹெலிகாப்டரில் வந்த அவர், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்களும், நலம்விரும்பிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இல்லாமல் போனது. அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவில் வேகமாக வளர்ந்து வந்தார் அண்ணாமலை. மூத்த தலைவர்களை ஓவர் டேக் செய்து வந்த அவரது வளர்ச்சி அபாரமாக இருந்தது என்று கூறினர். ஆனால், தற்போது, மூத்த தலைவர்கள் கை இந்த தேர்தலில் ஓங்கியுள்ளது என்பதற்கு வேட்பாளர்கள் பட்டியலே சாட்சி.
இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை அரசியலில் தனது அடுக்கட்ட முடிவை எப்படி எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்களும், அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.