கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தைகளை இருவரும் பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று கும்பகோணத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். கும்பகோணத்தை அடுத்த வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல இருவரும் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர்கள் இருவரும் கடைசியாக திருமணத்திற்கு முன் ஜோடியாக குல தெய்வம் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்துவிட்டு சென்றனர். அதன்பின்னர் இருவருமே குலதெய்வம் கோவிலுக்கு செல்லவே இல்லை.
இதனிடையே சமீபத்தில் விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது. அதேபோல் நயன்தாராவுக்கும் அவர் நடிக்க கமிட் ஆகி இருந்த இரண்டு படங்கள் கைநழுவி போயின. இதுதவிர அவர்கள் தயாரிப்பதாக இருந்த ஊர்க்குருவி படமும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றது.