தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம். எவ்வளவு காய்கறிகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. இது போதாது என்று நாமே சில காய்கறிகளை வத்தலாக செய்தும் வைத்துள்ளோம். அதில் ஒன்று தான் சுண்டக்காய் வத்தல். இந்த சுண்டக்காயை உட்கொண்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும் மற்றும் வயிறும் சுத்தமாகும்.
இப்படிப்பட்ட சுண்டக்காய் வத்தலைக் கொண்டு குழம்பு செய்தால், சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடும் போது, இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீடே மணக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்யத் தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே சுண்டக்காய் வத்தக்குழம்பை எப்படி எளிய முறையில் ருசியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுண்டக்காய் வறுக்க…
* கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* சுண்டக்காய் வத்தல் – 1/4 கப்
அரைப்பதற்கு…
* கடலை எண்ணெய் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 4
* வெந்தயம் – 5
* பூண்டு – 6 பல்
* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* மல்லி – 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
பிற பொருட்கள்…
* புளி – 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* வெல்லம் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் வத்தலை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 1 நிமிடம் நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, அதை எண்ணெயுடன் ஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், வெந்தயம், பூண்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 3-4 நிமிடங்கள் நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை 1 கப் நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுண்டக்காயை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் கொதிக்க வைத்து, இறுதியில் நல்லெண்ணெயை ஊற்றி கிளறி, 1/2 மணிநேரம் மூடி வைத்து பின் பரிமாறினால், வீடே மணக்கும் வகையில் சுவையான சுண்டக்காய் வத்தக்குழம்பு தயார்.