இன்று மதியம் என்ன சமையல் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தட்டைப்பயறு குழம்பு செய்யுங்கள். நீங்கள் செய்யும் தட்டைப்பயறு குழம்பு சுவையாக இல்லாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். நிச்சயம் இது உங்களுக்கு நல்ல பாராட்டை வாங்கித் தரும். மேலும் இந்த குழம்பு செய்தால் வீடே கமகமவென்று மணக்கும்.
தட்டைப்பயறு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சுவையான முறையில் தட்டைப்பயறு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தட்டைப்பயறு – 2 கப்
* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)
* பூண்டு – 6 பல்
* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
மசாலாவிற்கு…
* துருவிய தேங்காய் – 3/4 கப்
* வரமிளகாய் – 5-8
* மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 4 (தோலுரித்தது)
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் தட்டைப்பயறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து பின் அடுப்பை அணைக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், வரமிளகாய், மல்லி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்னர் வேக வைத்த தட்டைப்பயறை நீருடன் வாணலியில் ஊற்றி, அரைத்த மசாலாவையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து மேலே எண்ணெய் பிரியும் போதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தட்டைப்பயறு குழம்பு தயார்.