தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் நெய் பத்தலை செய்யுங்கள்.
இந்த நெய் பத்தல் செய்வதற்கு மீந்து போன சாதம் இருந்தால் போதும். அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பத்தலை செய்யலாம். இந்த பத்தலை கேரளாவில் காலை உணவாக கேரளா மக்கள் சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த பத்தலை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?
உங்களுக்கு நெய் பத்தலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் பத்தல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் – 1 கப்
* அரிசி மாவு – 1 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் – 1 1/2 கப் (துருவியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* சீரகம் – 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
* நெய் – தேவையானஅளவு
செய்முறை:
* முதலில் சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவை சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய், வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் நெய் தடவி, இந்த உருண்டையை ஒவ்வொன்றாக வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், தட்டி வைத்துள்ள பத்தலைப் போட்டு, குறைவான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான கேரளாக ஸ்டைல் பத்தல் தயார்.