காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுவது சரி, அதற்காக சைடு டிஷ் கூட ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தானே.
நீங்களும் தினமும் ஒரு வித்தியாசமான சைடு டிஷ்ஷை வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும், இட்லி, தோசை, பூரிக்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கடலை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சட்னியை 10 நிமிடத்தில் செய்யுங்கள்.
இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலை மாவு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறி
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 3 (கீறியது)
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்து, 1 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* உங்களுக்கு நீர் போன்று வேண்டுமானால், அதற்கு தகுந்தாற் போல நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கடலை மாவு சட்னி தயார்.