புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்’ வைத்த காவல்துறை? 19 இடங்களுக்கு அனுமதி மறுப்பு!
புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் ,தனது தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்காக வகுத்த திட்டங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் கால்பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்காக வகுத்த பிரம்மாண்ட திட்டங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘வீடியோ’ மூலம் வாக்காளர்களைச் சென்றடைய தவெக அதிரடி வியூகம் வகுத்து வருகிறது.
திட்டமிடப்பட்ட 23 இடங்கள்.. கிடைத்ததோ வெறும் 4!
புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களை ஆதரித்து, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி மாநிலத்தின் எல்லைப் பகுதியான காலாப்பட்டில் தொடங்கி கடலூர் அருகேயுள்ள முள்ளோடை வரை மொத்தம் 23 முக்கிய இடங்களில் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்த வேனில் விஜய் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக தவெக தரப்பில் முறைப்படி அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால், நான்கு நாட்கள் இழுத்தடிப்புக்குப் பிறகு காவல்துறை அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி, கோரப்பட்ட 23 இடங்களில் 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்:
வல்துறை தரப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தவெக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது:
நேரக் கட்டுப்பாடு: 12 மணி நேரப் பிரச்சாரத் திட்டத்திற்குப் பதிலாக, வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் மொத்தப் பிரச்சாரத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும்.
அண்டை மாநிலத்தவருக்குத் தடை: தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து விஜய்க்காகத் தொண்டர்கள் வரக் கூடாது. எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
ரோடு ஷோ கிடையாது: சாலைகளில் ஊர்வலமாகச் செல்ல (Road Show) அனுமதியில்லை; ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டமாக மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்.
கொளத்தூர் சம்பவத்தின் எதிரொலி?
சமீபத்தில் சென்னை கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாதியிலேயே பிரச்சாரத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை முன்மாதிரியாகக் கொண்டே, புதுச்சேரி காவல்துறை இவ்வளவு கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
வீடியோ மூலம் ‘டிஜிட்டல்’ பிரச்சாரம்?
நேரடிப் பிரச்சாரத்திற்குப் பல முட்டுகட்டைகள் போடப்படுவதால், தவெக தனது ‘பிளான் பி’ (Plan B)-யைக் கையில் எடுத்துள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்படும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், காவல்துறையின் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் வீடியோ செய்திகள் மூலம் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை எல்.இ.டி (LED) திரைகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க தவெக தொழில்நுட்பக் குழுவினர் தயாராகி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.