கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார்.
கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரியில் பிரதமர்: 50 நாட்களுக்கு மேலாக 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிரமான தேர்தல் பணியாற்றிய பிரதமர் மோடி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பகவதி அம்மன் கோயிலுக்கு காரில் பிரதமர் சென்ற போது, சாலையோரம் காத்திருந்த மக்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாக முழக்கம் எழுப்பினர். வேட்டி அணிந்து சென்ற பிரதமர், பகவதி அம்மன் கோயிலில் 20 நிமிடங்கள் வழிபாடு நடத்தினார்.
சிறப்பு படகு: இதையடுத்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு குழாமில் இருந்து, ‘விவேகானந்தா’ என பெயரிடப்பட்ட பிரத்யேக படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார்.
வேட்டி சட்டை அணிந்து சென்ற பிரதமர், விவேகானந்தர் நினைவு மண்டத்தின் கீழ் தளத்தில், பகவதி அம்மனின் பாதம் பதிந்த இடம் என கருதப்படும் ஸ்ரீபாதத்தில் வழிபட்டார். பின்னர், மண்டபத்திற்குள் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரின் படத்திற்கும், விவேகானந்தரின் சிலைக்கும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வெளிப்புறத்திலும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.
தியானம்:
இதையடுத்து, இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் விவேகானந்தர் சிலை உள்ள மகா மண்டபத்தில் தியானத்தை தொடங்கவுள்ளார். நள்ளிரவு வரை அங்கு தியானத்தை தொடரும் பிரதமர், சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, சனிக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை தரைத் தளத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு பகலாக தியானம் மேற்கொள்ளும் பிரதமர், அந்த நேரத்தில் இளநீரை மட்டுமே அருந்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருப்பார்கள் எனவும், அவருக்கு 100 அடி தூரத்தில் பாதுகாவலர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் அலுவலகம் செயல்படும் வகையில் விவேகானந்தர் மண்டபத்தில், தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி, விவேகானந்தர் மண்டபம் முழுமையாக பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.