அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது.
கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த அண்ணாமலைக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு அதிமுக கெட்ட கட்சியாகிவிட்டதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணியில் இருந்து பிரிந்த பின்னர், அதிமுக மற்றும் பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், தலைவர் பதவிக்கு யாருக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.
இதே போல, கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக சாடிய நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை முதல்முறையாக பொதுவெளியில் உடைத்துள்ளார் அண்ணாமலை… திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, அதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.உழைக்காமல் தலைவரான ஒரே நபர், அண்ணாமலைதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என தனக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்கவேண்டாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேரடியாக ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.