சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அத்தியாவசியத் துறைகள் தவிர இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை(அக். 16) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அதி கனமழை இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த 4 மாவட்டங்களிலும் முக்கிய துறைகளை தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் சேவை, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என்றும் பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் நாளை(அக்.16) மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும் படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.