திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.
அப்போது, “சேப்பாக்கத்தில் இந்த முறை வெற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தமுறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம்.” என்று கூறினார். அப்போது திமுக தொண்டர்கள் வேறு தொகுதி வேண்டாம் என்றும் சேப்பாக்கம் தொகுதியில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.தொடர்ந்து பேசிய உதயநிதி, திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் தெரிவித்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது உண்மையில் வருந்தத்தக்க சம்பவம் தான். ஆனால், அதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் துணை முதல்வர் குற்றஞ்சாட்டினார்.