தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு:
தில்லை நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் வீட்டிலும், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள அமைச்சரின் மகனும், எம்.பியுமான அருண் நேருவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ள தகவல்களின்படி, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு மற்றும் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் தொடர்புடைய மின் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டிலும் இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அப்போது 100 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிவைக்கப்படும் திமுக?
கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், திமுக அரசின் மூத்த அமைச்சரான கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள துரைமுருகன் வடமாவட்டங்களிலும், செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்திலும் மற்றும் கே. என். நேரு மத்திய மண்டலத்திலும் திமுகவின் முகமாக பார்க்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மூன்று பேர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனைகள் திமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டணி?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுகவை அரசியல் எதிரியாக கொண்டு செயல்படும் கட்சிகளை தங்களது தேசிய கூட்டணியில் கொண்டு வர பாஜக முயல்கிறது. இதுதொடர்பாக அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, உள்துறை அமைச்சரான அமித் ஷா சந்தித்து பேசியிருந்தார். இதுபோக திமுகவை எதிர்த்து தீவிரமாக களமாடி வரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் தங்களது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டே, மறுபுறம் திமுக கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் பணியில் பாஜக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே அடுத்தடுத்து அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.