ஸ்மோக் பிஸ்கட்களை, குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை சிறுவன் ஒருவர் உட்கொண்டு துடிதுடித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட அந்த காட்சி ஐதராபாத்தில் பொருட்காட்சியில் எடுக்கப்பட்டது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும் அது உயிருக்கு ஆபத்தானது எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட் வாங்கித் தர வேண்டாம் எனவும், சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தி, அதன் பாதிப்பு குறித்து விளக்கி சுற்றறிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் ஆய்வு நடத்தப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் இடத்தில் மட்டும் திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவை மீறி அதை பயன்படுத்தினால் உணவு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.