இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம்.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்திவருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், இந்தியா தொடங்கிய தாக்குதலால், அந்நாட்டின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்‘
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், ஏராளமான பெண்கள் தங்கள் குங்குமத்தை இழந்தனர். அதனால், அதைக் குறிக்கும் வகையில், சிந்தூர்(குங்குமம்/திலகம்) என்ற பெயரில், ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா நடத்தி வருகிறது.
இதை பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்று கூறியுள்ள அந்நாட்டு அரசு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போர் பதற்ற ஒத்திகை நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில் 5%-க்கு மேல் சரிந்த பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்
இன்று அதிகாலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
கராச்சி பங்குச் சந்தை(KSE-100) அதன் தொடக்க வர்த்தகத்தில் 5.5% அதாவது 6,272 புள்ளிகள் சரிந்து, 1,07,296.64 புள்ளிகளாகக் குறைந்தது. நேற்றைய தினத்தில், சந்தை 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது. இந்த பெரிய சரிவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உடனடி எதிர்வினையாகும்.
இதற்கு நேர்மாறாக, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் இன்று சிறப்பான ஏற்றத்துடன் தொடங்கின. காலை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் லாபத்தில் வர்த்தகமானது. சென்செக்ஸ் அதன் நேற்றைய நஷ்டத்தை சரிசெய்து, இன்று லாபத்திற்கு வந்தது. இதற்கிடையே, காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சிறிய அளவில் 83 புள்ளிகள் சரிந்து, 80,579 புள்ளிகளாகவும், நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 24,361 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
முன்னதாக, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போதும் பாகிஸ்தான் பங்குச்சந்தை 3.7% சரிவைச் சந்தித்தது. அந்த நேரத்திலும், இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் சுமார் 1.5% உயர்வை கண்டது.
பாகிஸ்தானில் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள அச்சம்
இதன் மூலம், பாகிஸ்தானில் முதலீட்டாளர்களிடையே பயம் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. அதேபோல், அந்நாட்டில் நிலவும் பதற்றத்தையும் இது காட்டுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், தற்போது இந்தியாவின் இந்த தாக்குதல், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதும் தெரிகிறது. பங்குச் சந்தையின் இந்த எதிரொலி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.