இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கி அழித்ததாக பகிரப்பட்டுவரும் செய்தியுடன் கூடிய வீடியோ போலியானது என பிஐபி(PIB) ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியதாக வெளியான வீடியோ
நள்ளிரவு தாக்குதல் மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய படைத் தலைமையகத்தையும் பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக, பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், “இந்தியா, அப்பாவி பாகிஸ்தானியர்களை கொல்ல உங்கள் ஃபைட்டர் ஜெட்டுகள் கிளம்பிய ஸ்ரீநகர் ராணுவ தளம் அழிக்கப்பட்டது. உண்மையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.. உங்கள் ஆக்ரோஷத்திற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.. பாகிஸ்தான் ஜிந்தாபாத்“ என்று அந்த பதிவில் கூறப்பட்டு, ஒரு வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
உண்மையை கண்டறிந்த இந்தியாவின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ(PIB)
இதையடுத்து, இந்த பதிவு குறித்த உண்மை சோதனை நடத்திய இந்திய அரசின் பிஐபி(Press Information Bureau), அந்த வீடியோ இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தானது அல்ல என்றும், 2024-ல் பாகிஸ்தானின் கைபர் பக்த்துன்க்வாவில் நடந்த மத மோதலின்போது எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது. அந்த வீடியோ, தற்போது நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், இதுபோன்ற பதற்றமான சூழல்களின்போது, இதுபோன் போலியான பதிவுகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிஐபி அறிவுறுத்தியுள்ளது.