பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 25 இந்தியர்கள் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் கொந்தளிப்பிற்கு ஆளான இந்தியா இந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்:
இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது இந்தியா. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பதில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானை முறியடித்தது. மேலும், இந்தியா நேற்று இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில், இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் சுட்டு வீ்ழ்த்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவ தளபதி வீடு அருகே குண்டுவெடிப்பு:
கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளும் சரமாரியாக பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறிய பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் வீடு அருகே இந்தியா நடத்திய தாக்குதலில் குண்டு வெடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பாக பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமர் மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் வீடு அருகேயும் இந்தியா தனது தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம் பீதியடைந்துள்ளது. பாகிஸ்தானை காட்டிலும் பன்மடங்கு பலம் வாய்ந்த இந்தியா கடல்வழியாக கராச்சியை தாக்கி வருவதாகவும், ஐஎன்எஸ் விக்ராந்த் மூலமாக பாகிஸ்தானின் கடற்படை தளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களை தாக்கியுள்ளது.
இந்தியா சரமாரி தாக்குதல்:
அதேபோல வான்படையும், ராணுவமும் இணைந்து ட்ரோன்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். எஸ்-400 ரக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய இந்தியா ஏராளமான ட்ரோன்களையும் பாகிஸ்தான் மீது ஏவி தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சியை வானிலே ஏவுகணைகளை வீழ்த்தி இந்தியா முறியடித்து வருகிறது.
இரு நாட்டு படையினர் இடையே மூண்டுள்ள இந்த போர் பதற்றத்தால் இரு நாட்டு மக்களும் பெரும் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ளனர். இந்தியா பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பகுதிகளை மொத்தமாக சூறையாட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.