#TNBJP #ANNAMALAI #MODI #TNPOLITICS #AIADMK #DMK #BJP #INDIA #CONGRESS #PIXELTV #PIXELMEDIA
சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜக கருத்தரங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலையின் படம் புறக்கணிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்களும் கொந்தளித்துள்ளனர்.
திருவான்மியூரில் இன்று, பாஜக தமிழ்நாடு சார்பாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்‘ தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அதற்காக வைக்கப்பட்ட பேனர்களில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படம் புறக்கணிக்கப்பட்ட சம்பவம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினார் – அண்ணாமலையின் உரசலே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது பாஜக-வில்.? பார்க்கலாம்.
தேர்தலை முன்வைத்து மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. தலைவருக்கான ரேஸில் நயினார், தமிழிசை, வானதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இருப்பதாக கூறப்பட்டது. அவரவர்கள் தங்களால் முடிந்த வரையில் தலைமையிடம் பேசிப் பார்த்தனர்.
இந்நிலையில், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டதால், தலைமை சற்று தயங்கியது. ஏனெனில், தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை உள்ளதால், கூட்டணி அமைக்கும் விதமாக, அதிமுக-விற்கு இணக்கமாக இருக்கும் ஒருவரைத் தான் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தது.
அதன்படி, அதிமுக-விற்கு நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தமிழ்நாடு தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.
சீனியர்களுக்கு சிக்கலாக இருந்த அண்ணாமலை
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதே, சீனியர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததால், அவர்கள் அனைவருமே அண்ணாமலை மீது கோபத்துடனேயே இருந்ததாக கூறப்பட்டது. மேலும், பாஜக தமிழ்நாட்டை பொறுத்தவரை, அண்ணாமலை வைத்ததே சட்டம் என்பதுபோல்தான் இருந்தது.
இதனால்தான், அண்ணாமலை மீண்டும் தலைவராக வந்துவிடக் கூடாது என்பதில் சீனியர்கள் உறுதியாக இருந்துள்ளனர். அதனாலேயே, அனைவருமே தலைவருக்கான ரேஸிலும் குதித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை – பேனரில் தவிர்க்கப்பட்ட புகைப்படம்
இந்த நிலையில்தான், தற்போது அண்ணாமலைக்கு கல்தா கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பாஜக தமிழ்நாடு சீனியர்ஸ். அதன் வெளிப்பாடாக, சென்னை திருவான்மியூரில் இன்று பாஜக சார்பாக நடைபெற்ற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்‘ கருத்தரங்க கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில், முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு கூட்டத்தில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நிகழ்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களில், நயினார் நாகேந்திரன், பவன் கல்யாண் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி போன்ற மாநிலத் நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அண்ணாமலையின் புகைப்படம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதனால், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
கொந்தளித்த அண்ணாமலை ஆதரவாளர்கள் – காலியான சேர்கள்
பேனர்களில் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டே அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறி கொதிப்படைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவித்து வந்தனர்.
இதையடுத்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், இந்த கருத்தரங்கிற்காக ஏற்கனவே 2 ஆயிரம் நாற்காலிகள் போட்டப்பட்டிருந்த நிலையில், கூட்டம் வராமல் நாற்காலிகள் காலியாக இருந்த நிலையில், 500 நாற்காலிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நாற்காலிகளை அகற்றியுள்ளனர்.
“அண்ணாமலை இல்லாமல் தேர்தலை எப்படி சந்திப்பார்கள்.?“
இப்படி, கூட்டம் காலியாக நடைபெற்ற நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், கட்சியின் தமிழ்நாடு தலைமையை கிழித்தெடுத்து வருகின்றனர்.
அண்ணாமலையின் புகைப்படத்தை புறக்கணித்தவர்கள், யாரை வைத்து ஓட்டு கேட்கப் போவார்கள் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என சுமார் 80 பேரிடம், அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என கூறிவிட்டதாக பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர், இவர்களுக்கு ஓட்டு போடக் கூடாது என பதிவிட்டுள்ளார்.
பாஜக தமிழ்நாட்டை பொறுத்தவரை, அண்ணாலைக்குப் பின்னரே கட்சி எழுச்சி அடைந்தது என்பதை, பாஜக தலைமை முதல் தொண்டர்கள் வரை மறுப்பவர்கள் இல்லை. ஆனாலும், தேர்தலுக்காகவே நயினா நாகேந்திரனை தலைவராக நியமித்தார்கள். ஆனால், மக்களிடம் செல்வாக்கு மிக்க அண்ணாமலையை புறக்கணித்துவிட்டு தேர்தலை சந்திப்பது கடினம்தான் என்ற கருத்து நிலவுகிறது.