தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை இளைஞர் உயிரிழப்பு:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோயிலில் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தனது நகை காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில், அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக கிடைத்த தகவல் அவரது குடும்பத்தையே உலுக்கியுள்ளது. விசாரணைக்கைதியை போலீசார் அடித்தே கொன்றுவிட்டதாக பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் வெடித்தனர். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
தொடரும் லாக்-அப் மரணங்கள்?
திமுக ஆட்சியில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடுமையாக சாடி வருகின்றன. போதைப்பொருள் பழக்கம், கள்ளச்சாராய மரணங்கள், பழிவாங்கும் நடவடிக்க்கையாக நிகழ்த்தப்படும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் தான் அஜித்குமார் எனும் விசாரணைக் கைதி சிறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, திமுக ஆட்சியில் கைதிகள் அடித்துக் கொல்லப்படுவது புதிதல்ல எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
28 லாக்-அப் மரணங்கள்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” என கடுமையாக சாடியுள்ளார்.
முதல் ஆண்டிலேயே 6 லாக்-அப் மரணங்கள்:
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது தொடங்கி முதல் ஓராண்டிலேயே 6 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதில்,
- தஞ்சாவூர் மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சீதாநகர் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, சீர்காழியை சேர்ந்த சத்தியவான் காவல்துறை விசாரணையின் போதே உயிரிழந்தார்
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கைது செய்து விசாரிக்கப்பட்ட மணிகண்டன் வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்
- சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது மனைவி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்த சில தினங்களிலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.
- சென்னை கீழ்பாக்கத்தில் பட்டாக்கத்தியுடன் திரிந்ததாக கைது செய்யப்பட்ட விக்னேஷ், அடுத்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது
- திருவண்ணாமலையை சேர்ந்த தங்கமணி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட மறுநாளே உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது
- சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர், அடுத்த சிறிது நேரத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைத்தபாடில்லை.
வழுக்கும் கழிவறைகள்:
நெடுங்காலமாகவே காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள், கழிவறைகளில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில், சென்னை புழல் மத்திய சிறையில் 304 கைதிகளுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டதற்கு, வழுக்கும் கழிப்பறைகளையே காரணமாக திமுக அரசு கூறியது” குறிப்பிட்டு இருந்தார். மேலும், இது அனைத்தும் பொய் எனவும், சட்ட விதிகளை மீறி காவல்துறை கைதிகள் மீது தாக்குதல் நடத்துவதகாவும்: குற்றம்சாட்டி இருந்தார்.
கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலைகளின்போது, எடப்பாடி தலைமையிலான அரசை திமுக கடுமையாக சாடியது. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்க தெரியாத முதலமைச்சர் என எடப்பாடி விமர்சிக்கப்பட்டார். ஆனால், இன்று எண்ணிலடங்கா லாக்-அப் மரணங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூட திறக்காதது ஏன்? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. நாடு போற்றும் ஆட்சி நான்கு ஆண்டே சாட்சி என வெற்று விளம்பரங்களை செய்யும் திமுக அரசு, மனித உயிரிர்களை காவல்துறை வேட்டையாடுவதை குறித்து மவுனம் காப்பது ஏன்? எனவும் வினவி வருகின்றனர். காவல்துறையின் அராஜகமும், ஒழுங்கற்ற செயல்பாடுகளும் கட்டுப்பாடின்றி தறிகெட்டு திரிவது, முதலமைச்சர் ஸ்டாலினின் கண்களுக்கு புலப்படவில்லையா? எனவும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.