மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்
துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாதையாத்திரை செல்வது என வித்தியாசமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஒரிஜினல் பணம் நோட்டு போல் டிக்கெட்ட அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனம் முடிவெடுத்துள்ளன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த ட்வீட்டில் ”துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். துணிவு குறித்து கருணாநிதி பதிவிட்டுள்ளதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
துணிவு இருந்தால் துக்கம் இல்லை!
துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை!— KalaignarKarunanidhi (@kalaignar89) October 1, 2014
கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் பெரிய புரமோஷன்கள் இல்லாமலே வெளியாகின. ஆனால் துபாயில் வானத்தில் போஸ்டர் பறக்கவிடப்பட்டது என இந்த முறை புரமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர் துணிவு படக்குழு. காரணம் வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் எனக் கூறப்படுகிறது.