தவெக தலைவர் விஜய் உயிரிழ்ந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையை இருகி கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
போலீசாரின் காவல் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை லாக் அப் மரணம்:
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், நிகிதாவிற்கு உதவி புரிந்த கோயில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர்.
மீண்டும் சனிக்கிழமையன்று காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், விசாரணையில் இருந்தபோது திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவமானது ஓட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
5 காவலர்கள் சஸ்பெண்ட்:
இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர், மேலும் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதே போல சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஆறுதல்:
இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொலைப்பேசியிலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறியிருந்தனர்
விஜய் நேரில் ஆறுதல்:
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உயிரிழ்ந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையை இருகி கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்தின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார்.
விஜய் அறிக்கை:
இந்த நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்.
இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.