அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் பல தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ட்ரம்ப் ஏற்றுமதி வரியை தடாலாடியாக உயர்த்தினார்.
ட்ரம்ப் விதித்த 50 சதவீதம்:
அமெரிக்காவுடன் நட்புறவுடன் இருந்து வரும் இந்தியாவை திடீரென எதிரி நாடு போல கருதி முதலில் 25 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தார். பின்னர், திடீரென இந்த ஏற்றுமதி வரியை 25 சதவீத்தில் 50 சதவீதமாக உயர்த்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கூடுதல் அதிர்ச்சி அளித்தார்.
இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும்பாலும் அமெரிக்காவி்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு மட்டும் 7.26 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்படும் தமிழ்நாடு?
ட்ரம்பின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
கடந்த நிதியாண்டில் அதாவது 2024- 25ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்து ரூபாய் 41 ஆயிரத்து 184 கோடிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கடந்த நிதியாண்டின் ஏற்றுமதியில் 11.92 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ப்பட்டிருக்கும்.
40 சதவீத ஏற்றுமதி:
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு நடக்கும் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு தோராயமாக சுமார் 40 சதவீதம் ஏற்றுமதி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள இந்த விதியால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு நடப்பதாக தரவுகள் கூறுகிறது.
ரெடிமேட், எலக்ட்ரானிக் பொருட்கள்:
தமிழ்நாட்டின் முக்கியமான தொழில்களான ரெடிமெட், எலக்ட்ரானிக், காலணி போன்ற பல தொழில்கள் இதனால் பாதிக்கப்படும் என்றே அஞ்சப்படுகிறது. திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடிக்கு வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதில் 12 ஆயிரம் கோடிக்கு மட்டும் அமெரிக்காவிற்கு ஆயத்த ஆடைகள் அதாவது ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள 16 சதவீத வரியுடன் தற்போது 50 சதவீதமும் சேர்த்து 66 சதவீதமாக வரி உயர்ந்திருப்பதால் திருப்பூர் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.
மேலும், ஜவுளி தொழில், மோட்டார் பம்பு தொழில், தோல் பொருட்கள் ஏற்றுமதியும் மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் விவசாயத்திலும் ட்ரம்பின் இந்த வரி தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகியுள்ளது. ஈரோட்டிற்கு பெருமை பெற்றுத் தரும் மஞ்சள் மட்டும் அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் 8 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ட்ரம்பின் இந்த வரி விதிப்பு மஞ்சள் ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
வேலையிழப்பு அபாயம்:
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வரி விதிப்பால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பொருட்கள் தேக்கம், வேலையிழப்பு அபாயம் உண்டாகும் என்றும் அஞ்சப்படுகிறது.