தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் பிரச்னைகளை கூட விஜய் எழுதி வைத்து படிப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
விஜயை அட்டாக் செய்த சீமான்:
”நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். அதன்படி, “மிகவும் ஆபத்தானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். TVK TVK என வருவார்கள். அப்போது நாங்கள் டீ விற்க வந்த கூட்டம் அல்ல. நாட்டில் நிலவுகின்ற தீய அரசியலுக்கு தீ வைக்க வந்த கூட்டம் என உரைக்க வேண்டும். நாங்கள் தளபதி, தளபதி என கத்த வந்த கூட்டம் அல்ல. நாட்டு மக்களின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம். நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல தத்துவ கூட்டம். நாங்கள் கூடி கலைகிற காகங்கள் அல்ல. கூடிப் பொழிகிற மேகங்கள் என்பதை காட்ட வேண்டும்.
”எழுதி வைத்து படிக்கும் விஜய்”
மக்களுக்கான பிரச்னைகளை கூட எழுதி வைத்து பேசுபவன் எங்கே, இதயத்தில் இருந்து பேசுபவன் எங்கே? ஏன்யா இப்படி பண்றிங்க.. வலது பக்கம் திரும்பவும், வேகமாக கையை உயர்த்தவும், இங்கே சத்தமாக பேசவும் அதானே.. இயக்குனருக்கு கீழே நடித்து பழகி அரசியலிலும் ஒரு இயக்குனர் தேவைப்படுகிறது. நான் என் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்ததாக சொல்லிக் கொள்கிறார். நீங்கள் வரவேண்டும் என உங்கள் வீட்டு வாசலில் யார் நின்றார்கள்? ஏன்பா இப்படி பேசி திரிகிறாய்? ரஜினியோ, அஜித்தோ தங்களது புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் மக்கள் பிரச்னைகளை மனதில் இருந்து பேசினார்கள். ஸ்டாலின் கூட அரைசீட்டு வைத்து தான் பேசுவார். ஆனால், எடப்பாடியும், விஜயும் முழு சீட்டு வைத்து பேசுகின்றனர். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன், இவர்களில் யார் சிறந்தவர் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவர்களால் மழையில் பேச முடியாது, காகிதம் நனைந்து விடும்” என விஜயை தீவிரமாக விமர்சித்து பேசியுள்ளார்.
திருப்பிக் கொடுக்கும் தவெக:
சீமானின் பேச்சை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனிடையே அவரது பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் இணையத்தில் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, “கட்டுக் கதைகளும், புரட்டுகளையும் பேசுபவர்களுக்கு பேப்பரில் எழுதி வைத்து படிக்க வேண்டிய அவசியமில்லை சீமான்.. திமுக கொடுத்த டாஸ்கை மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருவதை உணர முடிகிறது.. ஏமாற்றி பெற்று வந்த இளைஞர்களின் வாக்கு வங்கியை விஜய் பறித்துவிடுவாரோ என்ற அச்சத்தை உங்களது பேச்சில் காண முடிகிறது சீமான்.. அன்று ரஜினியை இகழ்ந்து பேசிய நீங்கள், இப்போது உங்களது தேவைக்காக புகழ்வதை என்னவென்று சொல்வது சீமான்.. அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பது தான் உங்களது கொள்கையா சீமான்?.. விஜய் உங்களை கண்டுகொள்ளாமல் லெஃப் ஹேண்டில் டீல் செய்யும்போதே இப்படி குதிக்கிறீர்களே? இன்னும் உங்களை பற்றி பேசிவிட்டால் எவ்வளவு கதறுவீர்கள்?” என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.