சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி.
நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வெளிப்படையாகவே சந்தித்தேன். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன்.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்; மறைக்கவில்லை
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள்.
எதிர்க் கட்சியாக இருந்தபோது சட்டையைக் கிழித்துக்கொண்டவருக்கு என்னைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
பாஜக தலையீடு இல்லை
டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்தபடி, அதிமுகவுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், இப்போது என்னைப் பற்றிப் பேசி அரசியல் செய்கிறார்.
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை. எங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.