இந்தியா – பாகிஸ்தான் மோதலை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கனடா பிரதமர் பாராட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் நிறுத்தினார், எனும் வகையில் கனடா பிரதமர் பேசியுள்ளார்.
ட்ரம்பை பாராட்டிய கனடா பிரதமர்:
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்பை கனடா பிரதமர் மார்க் கார்னே பாராட்டியுள்ளார். மேலும் அவரை மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் என்றும் வாஷிங்கடனில் பேசியிருக்கிறார். ஓவல் அலுவகலத்தில் ட்ரம்ப் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, “நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர். பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம், பாதுகாப்பு செலவினங்களுக்கு நேட்டோ கூட்டாளிகளின் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான உறுதிப்பாடுகள், இந்தியா, பாகிஸ்தான் முதல் அஜர்பைஜான், ஆர்மீனியா வரை அமைதியை நிலைநாட்டியது மற்றும் பயங்கரவாத சக்தியான ஈரானை முடக்குதல் வரையில் ட்ரம்ப் ஒரு சிறந்த மாற்றத்திற்கான அதிபராக செயல்பட்டுள்ளார்” என கனடா பிரதமர் பாராட்டியுள்ளார்.
கனடாவின் சுயநலம்:
கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவகாரத்தில் முட்டல் மோதல் நிலவுகிறது. ட்ரம்பும் வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவிற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தான் பேசி வருவதை இந்தியா ஏற்காததால் ட்ரம்ப் அதிருப்தியில் இருப்பதகாவும் கூறப்படுகிறது. இதனிடையே, கனடாவையும் அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைத்துக் கொள்ள அவர் விருப்பம் தெரிவித்து வருகிறார். அண்மையில் ட்ரக்குகள் மீது விதிக்கப்பட்ட அமெரிக்காவின் வரி உள்ளிட்ட நடவடிக்கையால், கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. எனவே, ட்ரம்பை பாராட்டும் விதமாக நட்பினை வளர்த்து, அமெரிக்காவிடம் இருந்து தங்களுக்கான பலன்களை பெறவே இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தை கனடா தங்களுக்கு சாதகமாக கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும் உரிமை கோரும் ட்ரம்ப்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் தீவிரப்போர் வெடிக்கக் கூடும் என்ற நிலை நிலவியபோது, மே 10ம் தேதியன்று அதிபர் ட்ரம்ப் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டார். அமெரிக்க அரசாங்கம் இரவு முழுவதும் நடத்திய மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான், உடனடியாக மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். அதன் பிறகு தனது முயற்சியின் காரணமாகவே இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாக, 50 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் ட்ரம்ப் பொதுவெளியில் பேசி வருகிறார்.
ஊறுகாய் ஆன பாக்., விவகாரம்
அதேநேரம், ட்ரம்பின் பேச்சை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தலைமை தொடர்பு கொண்டு போரை நிறுத்திக் கொள்ளலாமென என கேட்டுக்கொண்டதாலேயே தாக்குதலை நிறுத்தியதாக நமது ராணுவம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தங்களது சுயநலனுக்காகவும், அமெரிக்காவின் நட்பை பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்தியா உடனான மோதலை நிறுத்த அமெரிக்கா தான் உதவியது என பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பேசி வருகிறது. அந்த வரிசையில் தங்களது நலனுக்காக, கனடாவும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை பயன்படுத்த தொடங்கியுள்ளது.