உங்களின் மரியாதையை உயர்த்தக்கூடிய, நீங்கள் கற்றுக் வேண்டிய 5 முக்கியமான பண்புகளை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்..
மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. நீங்கள் பிரபலமானவராக இருந்தாலும் அல்லது அதிகாரத்தின் மூலமோ மரியாதையை முழுமையாகப் பெறுவது என்பது இயலாத காரியம். அதே சமயத்தில் சில மனிதர்களது இருப்பே அந்த இடத்தின் சூழலை மற்றும் அளவிற்குக் கம்பீரமானதாக இருக்கும். அனைவரும் அவரை மரியாதையுடன் நடத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள சில முக்கிய பண்புகள். அதுபோல..
1) வாக்குறுதியை நிறைவேற்றுவது: சொன்னதை செய்யக்கூடிய மனிதர்களை மற்றவர்கள் எப்போதும் மதித்துத் தலை வணங்குவார்கள். சொன்ன நேரத்திற்கு ஒரு இடத்திற்கு வருவதும், செய்து தருவதாகக் கூறிய வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பதும், ரகசியங்களை பாதுகாப்பதும் கூட ஒரு வகையான வாக்குறுதிதான்.இதன் மூலம் மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுவதோடு அவர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். வாக்குறுதியை நிறைவேற்றாத மனிதர்களை யாரும் பெரிதாக மதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
2) அதிக கவனம் குறைவான பேச்சு: உரையாடல்களின் போது தான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்காமல் மற்றவர்கள் பேச்சைக் கவனமுடன் கேட்பவர்களுக்கு மற்றவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீங்கள் எவ்வளவுதான் தெளிவாகவும் உண்மையை பேசுபவராக இருந்தாலும் கூட மற்றவர்களும் தங்களது கருத்துக்களைக் கூறுவதற்கு இடம் அளிக்காவிட்டால் உங்களை யாரும் பெரிதாக மதிக்கமாட்டார்கள்.மற்றவர்கள் பேசும்போது குறுக்கே எதுவும் பேசாமல் அவர்களது பேச்சை முழுமையாகக் கவனிப்பதும், இவர்கள் இப்படித்தான் என்று நீங்களாகவே ஒரு முடிவிற்கு வராமல் அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது பரஸ்பர மரியாதையை உண்டாக்குவதோடு மற்றவர்களும் உங்களது பேச்சைக் கூர்ந்து கவனிக்க வழிவகை செய்கிறது.
3) இரக்க குணம்: ஒரு மனிதன் எவ்வளவு பலசாலியாகவும், நேர்மையானவராகவும், பணக்காரனாகவும் அல்லது மிகப்பெரிய பிரபலமாகவும் இருந்தாலும்கூட அவர்கள் மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் மற்றவர்கள் அவர்கள் மீது மரியாதை வைப்பார்கள். அனைவருடனும் இரக்ககுணம் உடைய ஒரு மனிதரை அனைவரும் விரும்புவார்கள்.தலைக்கணம் இல்லாமல் இருப்பதும், பொறுமையாக இருப்பதும், மற்றவர்களுக்கு உதவுவதும் சிறிய உதவிகளுக்கு நன்றி சொல்வதும் கூட ஒரு வகையான நற்பண்புதான். இதன் மூலம் மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதை ஏற்படும். அது உண்மையானதாகவும் இருக்கும்.
4) குழப்பமான சூழலில் அமைதியுடன் இருங்கள்: ஒரு சூழலானது எவ்வளவு சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் அல்லது சவாலானதாகவும் இருந்தாலும் கூட சில மனிதர்கள் எப்போதும் அதனை தங்கள் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் மிகுந்த அமைதியுடனும் பொறுமையுடனும் இருப்பார்கள். இதுபோன்று மனிதர்கள் மீது மற்றவர்கள் இயற்கையாகவே கவரப்படுவார்கள். இது சிறந்த தலைமைக்கான ஒரு முக்கிய பண்பாகும்
ஒரு சவாலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களது மரியாதை அதிகரிக்கும். சிறு சிறு விஷயங்களுக்கு கூட சுய கட்டுப்பாட்டை இழந்து கோபப்படுபவர் மீதும், அடிக்கடி மற்றவர்களின் மனதைப் புண்படுத்துபவர்களையும் யாரும் பெரிதாக மதிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக சுய கட்டுப்பாட்டையும் நம்முடைய உணர்வுகளின் மீது கவனமுடனும் இருந்தால், அனைவரையும் கவர்ந்து உங்கள் மீது ஒரு நம்பிக்கையையும் மரியாதையையும் உண்டாக்கும்.
5) புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது: எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தங்களை மெருகேற்றிக் கொள்பவர் மீது இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பும் மதிப்பும் ஏற்படும். புதிய விஷயம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, புதிதாகப் படிப்பது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது, புதிய குறிக்கோள்கள் என அனைத்துமே இதில் அடங்கும். இவ்வாறு நீங்கள் புதிதாகக் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்தவித தயக்கமுமின்றி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் போது உங்கள் மீது அதீத மரியாதையை உண்டாக்கும்.