சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பணி மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பான சூழல் உருவானது.
2009 மே 31-ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8370 ரூபாயும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5200 ரூபாயும் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியம் 3170 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும், இந்த சம்பள வித்தியாசம் தற்போது 16,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதை களைய வலியுறுத்தி, கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தாங்கள் ஆட்சி அமைக்கும்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
திமுக ஆட்சிக்கு வந்தும், வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் 2022ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களை காவல் துறை கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை திமுக அரசு போராட விட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல, ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை மீண்டும், மீண்டும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார்.