திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில், விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திமுக அரசின் இன்று கடைசி நாள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் , தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றது. கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆட்சி இன்று (14-ந் தேதி) நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், நாளை (15-ந் தேதி), தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தற்போதுள்ள அரசு, காபந்து அரசாகிவிடும். எந்த வித புதிய திட்டங்களையோ, அரசு நலத்திட்டங்களையோ செயல்படுத்த முடியாது. மேலும் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது.
புதிய திட்டங்களை தொடங்க முடியாது
மேலும் தங்களுக்கு அரசு சார்பாக ஒதுக்கப்பட்ட வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த முடியாது. ஏதாவது மிக முக்கிய பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். அடுத்த ஆட்சி அமையும் வரை தற்போது உள்ள அரசு காபந்து அரசாக மட்டுமே செயல்பட முடியும்,
இன்று பணிக்கு வர உத்தரவு
நாளைய தினம் (15-ந் தேதி) தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், இன்றுதான்(14-ந் தேதி) இந்த ஆட்சியின் நிறைவு நாளாக இருக்கும். எனவே முக்கிய துறைகளின் அதிகாரிகளை, இன்று விடுமுறை நாளென்றாலும் வேலைக்கு மேலதிகாரிகள் வரவழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலுவையில் உள்ள சில ஆணைகளுக்கான கோப்புகளை முடித்து வைக்கவும், கோப்புகளை நிலுவையில் வைக்காமல் இறுதி செய்யவும் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அது சார்ந்த அதிகாரிகளை மட்டும் முக்கிய துறைகளின் மேலதிகாரிகள் இன்று பணியாற்றும்படி அழைத்துள்ளனர் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது.