அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
TN Govt Teachers Protest: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:
தங்களது நீண்டகால கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதனை நிறைவேற்ற வேண்டும் என அரசு இடைநிலைப் பள்ளி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பதாகைகளை ஏந்தியபடி சாலை மறியல் செய்வது, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொள்வது போன்ற பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் சேப்பாக்கம் அருகே உள்ள சிவானந்தா சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகள் திறப்பு – மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில், மாவட்ட தலைநகரங்கள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் பேசுகையில், ”யாருடைய தூண்டுதலாலும் போராட்டம் நடைபெறவில்லை. எங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென தான் கேட்கிறோம். போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஊதிய முரண்பாடு 2009-ம் ஆண்டுக்கு பின்பு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி” என வேதனை தெரிவித்தார்.
அரசுக்கு கோரிக்கை
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய முரண்பாட்டை களையவில்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய முரண்பாடுகளை களைந்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை 10 நாட்கள் வரை போராட வைத்திருப்பது மிகவும் வேதனைக்குறியது என போராட்டக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ரிக் அடிப்பாரா சி.எம். ஸ்டாலின்?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புத்தாண்டு பிறந்தது முதலே முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் ஆகிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுமா? என்பதே தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமைச்சர் நம்பிக்கை:
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் போதே, அடுத்த ஊதியக் குழு வந்துவிட்டது. இதன் காரணமாக ஊதிய உயர்வு இல்லாமல் சம்பளம் குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். எனவே இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது