தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக ஒப்பந்ததாரர்கள் தீடிரென கைவிரித்தனர். இதனால், கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தவெக 2- ஆவது மாநில மாநாடு
மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அதிக அளவிலான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை, அவசர மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டுக்கு சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் அமைக்கும் பணி
அதன்படி, மாநாடு நடைபெறும் இடத்தில் ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டு அதில், 2, 500 இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த 5 நிறுவனங்களிடம் இருக்கைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே நாற்காலிகள் வழங்கி உள்ளன. மற்ற நிறுவனங்கள் கடைசி நேரத்தில் நாற்காலிகள் வழங்க முடியவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் இருந்து 50 ஆயிரத்துக்கு மேல்…
இதைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் மதுரை மாவட்டம், பாரபத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 1. 50 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ள நிலையில், அதையும் தாண்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தால் அவர்கள் நின்று கொண்டு மாநாட்டை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெறுவதில் பல்வேறு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அரசியல் அழுத்தம் காரணமாகவே கடைசி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவனங்கள் இருக்கைகள் தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.