தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளது.
நெருங்கும் தேர்தல்- கூட்டணி தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் திமுக– அதிமுக– தவெக– நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய காய் நகர்த்தி வருகின்றது. அதில் எதிர்கட்சியாக அதிமுக எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டுமிட்டு திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய அதிமுக, அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நாளை மறுதினம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் அன்புமணி
அதே நேரம் பாமகவில் அன்புமணி தரப்பிலான அணி அதிமுகவுடன் கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது. இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள பசுமைவழிச்சாலைக்கு சென்ற அன்புமணிக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளித்தார். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே ஓப்பந்தம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டி போட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அடுத்தாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்தித்தார். அப்போது பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி இணைந்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். எனவே அன்புமணி பாமகவிற்கு குறைந்தது 25 தொகுதிகளை ஒதுக்கும் படி கேட்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி கூட்டணி உறுதியானதை தெரிவித்தனர். மேலும் பாமகவிற்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.