தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார்.
TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மாநில சட்டமன்றத்தில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இணைந்து ஆளுநரை அவைக்கு அழைத்து வந்து, சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.
ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்..
அவையில் தனது மைக்கை ஆஃப் செய்து, தன்னை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். முன்னதாக கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளிலும் அரசு தயார் செய்து கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. அவை நடவடிக்கைகள் தொடங்கும்போதே தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்கி ஆளுநர் உரை வாசிப்பார். அதன் தமிழ் உரையை வாசிப்பார் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற மரபை மாற்ற முடியாது என தமிழ்நாடு அரசு உறுதியாக கூறிவிட்டது. இதனால் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அந்த வரிசையில் நடப்பாண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். இதையடுத்து ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்?
அவையில் முதல்நாள் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் சபநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் எத்தனை நாள் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். நான்கு முதல் 5 நாட்கள் அவை நடவடிக்கைகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மரணமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். 22ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது. இறுதியாக உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக மீது வைக்க வேண்டிய குற்றச்சாட்டுகள் என்ன என்பதை, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு வருகின்றன. அதனை சமாளிக்க ஆளுங்கட்சியும் முழு வேகத்தில் தயாராகி வருவதாக தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தொடர் விவாதத்தில் அரசியல் பேச்சுகள் பரபரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.