தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்டதை பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு, ”விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை. அவர் ஊழல் செய்த வழக்கில் சிறை சென்று வந்த செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு எங்களை ஊழல் கட்சி என சொல்கிறார். ஜெயலலிதாவை ரோல் மாடல் என சொல்லிக் கொண்டு யாரை அவர் ஊழல் சக்தி. நாட்டு நடப்பே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளிக்கு வந்தால் தான் என்ன நடக்கும் என்பது தெரியும். எந்த கட்சிக்கு எந்த கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.
விஜய் மக்களையும் பார்க்கவில்லை, என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ள டிவியையும் பார்க்கவில்லை. கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் 72 நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் அவர். எந்த கட்சி யாருடன் கூட்டணி வைத்துள்ளது என்பது விஜய்க்கு தெரியாது. அவரை முதல் செய்தியாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் திமுக, அதிமுகவை ஊழல் கட்சி என தெரிவித்திருந்தார். மேலும் திமுகவை ஒழிக்க தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே முடியும். இதனையடுத்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.