சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
Communist Nallakannu Death: தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருபவர் நல்லகண்ணு. கடந்த 1925ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிறந்த இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
இறுதி அஞ்சலி:
நல்லகண்ணு காலமானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தலைவர்களும், பொதுமக்களும் நேரில் சென்று தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த நல்லகண்ணுவின் உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னையின் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
நல்லகண்ணு உடல் என்ன செய்யப்படும்?
பின்னர், அரசு மரியாதை அளிக்கப்பட்டு அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக அரசு மருத்துவமனைக்கே வழங்கப்பட உள்ளது. அரசு மரியாதை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும். தான் உயிருடன் இருந்தபோதே, தன் மறைவிற்கு பிறகு தனது உடல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கு பயன்பட வேண்டும் என்று தனது உடலை எழுதிவைத்துவிட்டார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இளமைக் காலத்தில் விடாப்பிடியாக போராடிய இவர், ஆங்கிலேய ஆட்சியில் சிறைவாசத்தை பல முறை அனுபவித்துள்ளார். தமிழ்நாட்டின் தகைசால் தமிழர் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவரது அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
ஒரு வார துக்கம்:
நல்லகண்ணுவால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்களும் கம்யூனிஸ்ட் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவரது மறைவு காரணமாக ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுபோன்று தங்களது உடலை உயிரிழந்த பிறகு மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்க வேண்டும் என்றால், உடலை தானமாக வழங்குபவரின் சம்மதம் அவரின் குடும்பத்தினரின் சம்மதம் இருக்க வேண்டும். நல்லகண்ணுவின் உடல் தானமாக வழங்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டி உறுதி செய்துள்ளார்.
சாகும் வரை போராளி:
கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளமான இவர் 13 ஆண்டுகள் அந்த கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். தலைமறைவு வாழ்க்கை, சுதந்திரத்திற்காக போராட்டம் என அனைத்து இன்னல்களையும் இந்த மண்ணிற்காக அனுபவித்துள்ளார்.
ஒரு கறைபடியாத அரசியல்வாதியாக தனது வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார். இவருடைய 80வது பிறந்தநாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து இவருக்கு நன்கொடையாக கட்சி வழங்கியதை கட்சிக்கே நன்கொடையாக வழங்கினார். மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும், இவருடைய செல்வாக்கு துளியளவும் இறக்கும் வரையிலும் சரிந்தது இல்லை.