தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது.
நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தொடங்கியுள்ளது. இதற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியானது 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக., மநீம உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் SDPI
இந்த நிலையில் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தை கொண்டுள்ள SDPI கட்சியானது திமுக கூட்டணியில் இடம்பெறவுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட SDPI திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய SDPI திமுக கூட்டணியில் இணையவுள்ளது.
SDPI-கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து SDPI தலைவர் நெல்லை முபாரக் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று திமுக, கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்க SDPI கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. எனவே இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பட்டியலை SDPI கட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் SDPI கட்சிக்கு 2 அல்லது 1 தொகுதியானது ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.